மத்தியப் பிரதேசத்தில் ஓடும் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலிலிருந்து ஹைதராபாத் நோக்கி பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது பெதுல் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் புதன்கிழமை இரவு 10 மணியளவில் பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த ஏறக்குறைய 60 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுதொடர்பாக ஷாபூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவநாராயண் முகதி கூறுகையில், மாவட்டத் தலைமையகத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண்.69ல் ஓடும் பேருந்தில் தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் புகை மூட்டத் தொடங்கிய பின்னர், பயணிகள் அனைவரும் பேருந்தை விட்டு விரைவாகக் கீழே இறங்கினர். இதில் யாருக்கும் தீக்காயம் ஏற்படவில்லை.
இருப்பினும் பேருந்து மற்றும் பயணிகள் வைத்திருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது, பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். அதனைதொடர்ந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.